இறுதியாக ஆடிய புஜாரா
ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2014ம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக டெஸ்ட் கிங் சத்தீஸ்வர் புஜாரா விளையாடினார். அதுமுதல் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அவர் தன்னை சிறப்பாக நிரூபித்த போதிலும் எந்த அணியும் அவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
புஜாராவை ஏலம் எடுத்த சிஎஸ்கே
இந்நிலையில் தற்போது 2021 ஐபிஎல் ஏலத்தில் அவரை சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதுகுறித்து அவர் நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். எப்போதும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துவரும் புஜாரா, நீண்ட காலத்திற்கு பிறகு அதில் தற்போது பங்கேற்றுள்ளார்.
புஜாரா ஆர்வம்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக தான் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் குறித்து பாராட்டு
மேலும் இங்கிலாந்து தொடர் முடிந்தபின்பு தன்னுடைய முழுகவனத்தையும் ஐபிஎல் தொடரில் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடர் பல திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். சில இளம் வீரர்களையும் ஐபிஎல் சிறப்பாக உருவாக்கியுள்ளதாகவும் இதன்மூலம் இந்திய அணி சிறப்பான பலன்களை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முக்கியமான பகலிரவு டெஸ்ட்
ஆனால் தற்போது தன்னுடைய கவனமெல்லாம் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே உள்ளதாகவும் இந்திய அணி கண்டிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு அடுத்ததாக நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டி முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.