பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின், அரையிறுதி சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரெரா மற்றும் தீக்சனாவின் ஆட்டத்தால் 46.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கற்பனை செய்ய முடியாத பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், எங்களின் அணி வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றியதும், ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் வீசியதன் மூலம் சவால் அளித்தோம். அதன்பின் பிட்ச் கொஞ்சம் மிதமாக மாறியது.
சேஸிங்கில் போது எங்கள் அணியின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் இரண்டாம் பாதியில் மழை வரும் என்று எதிர்பார்த்தோம். நல்ல வேளையாக மழை ஏதும் வரவில்லை. இதுபோன்ற விஷயங்களை கணிக்க முடியாது. இலங்கை அணியில் குசல் பெரெரா போன்ற வீரர்கள் ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள்.

அதேபோல் அணியில் முன்னணி ஸ்பின்னர்கள் இல்லாமல் மாற்று ஸ்பின்னர்கள் இருப்பது மகிழ்ச்சி தான். உலகக்கோப்பை லீக் போட்டிகள் இறுதியில் சில அணிகள் ஒரே புள்ளிகளில் முடிக்க வாய்ப்புகள் உள்ளது என்று நினைக்கிறேன். எங்களுக்கு சாதகமாக போட்டிகளின் முடிவுகள் அமைந்தால் அரையிறுதியில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அந்த சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்று கூறினார்.