கொல்கத்தா: தம் மீதான யாருடைய விமர்சனங்களுக்கும் பதிலளிக்கப் போவதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி காட்டமாக கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 பந்துகளில் 20 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டு தம் மீதான விமர்சனங்களை அதிர்வேட்டாக தகர்த்தவர் டோணி. கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டோணி, ஆசிய கோப்பை போட்டியில் நாம் வெற்றி பெற்றதை விட தோற்றிருந்தால் மிகப் பெரிய செய்தியாகி இருக்கும்.

விமர்சனங்களை நிறைய பேர் முன்வைக்கலாம்... ஆனால் என்னுடைய வேலை சரியாக விளையாடுவது.. அணியை வழிநடத்துவதுதான். விமர்சனங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும்.... அதற்கெல்லாம் பதில் சொல்லப் போவது இல்லை என்றார்.
வழக்கம் போல டோணியிடம், ஓய்வு பெற எப்போது திட்டமிட்டுள்ளீர்கள் என்ற கேள்வியையும் செய்தியாளர்கள் முன்வைத்தனர். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
கடந்த வாரம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக டாக்கா செல்லும் முன்னரும் இதேபோல் ஓய்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப கொஞ்சம் காட்டமாகவே மறுப்பை தெரிவித்திருந்தார் டோணி என்பது குறிப்பிடத்தக்கது.