அகமதாபாத்: கடந்த 9 மாதங்களாக சோசியல் மீடியாவை பயன்படுத்தவில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை தொடங்கவுள்ளது. இதுவரை இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள 7 உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது. இதனால் இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா, அல்லது பாகிஸ்தான் அணி புதிய வரலாற்றை உருவாக்குமா என்ற விவாதம் ரசிகர்களிடையே தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று முதலே கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றிய தங்களது எதிர்பார்ப்பை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், கடந்த 9 மாதங்களாக நான் சோசியல் மீடியாவை பயன்படுத்தவில்லை. சோசியல் மீடிவாவில் வரும் அழுத்தங்களை எதிர்கொள்ள ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. சிலருக்கு சோசியல் மீடியவை பயன்படுத்துவது பிடிக்கும். இன்னும் சிலருக்கு பிடிக்காது.
அதேபோல் சோசியல் மீடியாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் இடத்தில் நானும் இல்லை. அவரவர்களாக சோசியல் மீடியாவை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை, நாளை எங்களுக்கு மிக முக்கியமான போட்டி இருக்கிறது. தரமான அணிக்கு எதிராக விளையாட வேண்டும். கடந்த 2 போட்டிகளில் எப்படி சிறப்பாக விளையாடினோமோ, அதேபோல் மீண்டும் விளையாட வேண்டும்.
இந்திய அணிக்கு உளவியல் ரீதியாக சாதகம் இருக்கிறது என்பதை நம்ப மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது பற்றி சிந்திக்க விரும்பவில்லை. அதற்கு பதிலாக நாளைய ஆட்டத்தை எப்படி வெல்ல வேண்டும் என்பதில் தான் கவனம் உள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடரில் எந்த அணி பேவரைட்ஸ் என்றும், கத்துக்குட்டி அணி என்றும் சொல்லிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.