பெங்களூரு: ஆசியக் கோப்பைத் தொடரில் 71வது சதத்தை விளாசிய பின் மனைவி அனுஷ்கா சர்மாவிடம் பேசிய போது கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது என்று ஆர்சிபி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
16வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி அணி 15 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். 11 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 420 ரன்களை விளாசியுள்ளார்.

நடப்பு சீசனில் சிறந்த ஃபார்மில் ஆடி வந்தாலும், கடந்த சீசனில் மோசமான ஃபார்மில் இருந்தார் விராட் கோலி. ஆனால் ஆசியக் கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய பின், விராட் கோலி பேட்டிங் மீண்டும் உச்சத்தை எட்டியது. இது விராட் கோலி 2.0 என்று ரசிகர்கள் கொண்டாடும் வகையில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் 71வது சதத்தை விளாசிய பின் ஏற்பட்ட உணர்வு குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆசியக் கோப்பைத் தொடரில் 94 ரன்கள் எடுத்திருந்த போதுதான், சதம் விளாசுவது பற்றியே யோசித்தேன். அடுத்தப் பந்தில் சிக்சர் அடித்த பின், நான் எனது 71வது சதத்தை எட்டினேன். அந்த நிமிடத்தில் எனக்கு அதிகமாக சிரிப்பு தான் வந்தது. இதற்காகவா 2 ஆண்டுகளாக போராடினேன் என்று சிரித்து கொண்டேன்.

அந்த 2 வினாடிகள் தான் சதம் விளாசிய உணர்வே இருந்தது. மறுநாள் சூரியன் எப்போதும் உதிப்பது போல் சாதாரணமாக மாறினேன். ஒரு சதத்தை விளாசிவிட்டு, அது என் வாழ்நாள் முழுக்க வரப் போகும் உணர்வு ஏற்படவில்லை. அதனால் கொஞ்சம் நன்றாக சிரித்தேன். ஆனால் என் மனைவி அனுஷ்கா சர்மாவிடம் பேசும் போது கண்களில் இருந்து கண்ணீர் சிந்திவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.