புனே: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசுவதற்காக விராட் கோலி சுயநலமானதாக விளையாடியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய அணி விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சார்பாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களும், சுப்மன் கில் 53 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விராட் கோலி 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனிடையே நசும் அஹ்மத் வீசிய 42வது ஓவரின் முதல் பந்திலேயே வெற்றிபெற வாய்ப்பு கிடைத்த நிலையில், விராட் கோலி சிங்கிள் ஓடாமல் க்ரீஸிலேயே நின்றார். இதன்பின் 3வது பந்தில் சிக்சர் அடித்து விராட் கோலி தனது 48வது சதத்தை விளாசினார்.
இதனால் விராட் கோலி சதம் விளாசுவதற்காக சுயநலமாக இருந்தார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பையில் இந்திய அணியின் நெட் ரன் ரேட்டை விடவும் சொந்த சாதனை முக்கியமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் விராட் கோலி சிங்கிள் ரன் ஓடாதது ஏன் என்று நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கேஎல் ராகுல் பேசுகையில், 42வது ஓவரில் விராட் கோலி சிங்கிள் ரன் எடுப்பதற்கு அழைத்த போது, நானே வேண்டாம் என்று கூறினேன். அப்போது கூட விராட் கோலி, இந்த சிங்கிளை எடுக்காவிட்டால் தவறாக இருக்கும். சொந்த சாதனைகளுக்காக விளையாடுகிறார் என்று ரசிகர்கள் நினைத்து கொள்வார்கள் என்று கூறினார். ஆனால், நாம் மிகச்சிறந்த சிறந்த வெற்றியை அடைகிறோம். அதனால் சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.