லண்டன்: யாருடைய கேப்டன்சியாக இருந்தாலும் எனது கடமை இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வதே என்று இந்திய ஜாம்பவான் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தோனியின் கேப்டன்சிக்கு பின் ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் 10 ஆண்டுகள் இந்திய அணி ரசிகர்கள் காத்திருந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் கடைசி நாள் ஆட்டம் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 280 ரன்கள் தேவையாக உள்ளது. களத்தில் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 20 ரன்களுடனும் சிறப்பாக ஆடி வருவதால், இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஏற்கனவே காபா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 324 ரன்கள் சேர்த்திருப்பதால், விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடினாலே இந்திய அணியால் வெற்றிபெற முடியும்.
இந்த நிலையில் ஐசிசி-க்கு விராட் கோலி நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அந்த நேர்காணலில் விராட் கோலி பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக ஏராளமான விஷயங்கள் களத்திற்கு வெளியில் நடந்துவிட்டது. நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் அதுபோன்ற சூழல் வந்து போயிருக்கும். ஆனால் இந்த தருணத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் மீண்டும் சிறந்த ஆட்டத்தை விளையாடி வருகிறேன் என்றே நினைக்கிறேன்.
இந்திய அணிக்காக ஒவ்வொரு முறையும் பேட்டிங் களமிறங்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அணிக்கு என்ன தேவையோ, அதனை செய்வதை பெருமையாக கருதுகிறேன். எம்எஸ் தோனி கேப்டன்சியாக இருந்தாலும், எனது கேப்டன்சியாக இருந்தாலும், ரோகித் சர்மா கேப்டன்சிக்கு கீழ் ஆடும் போதும், ஒரு பேட்ஸ்மேனாக எனது கடமை எப்போதுமே ஒன்றுதான். ஒவ்வொரு முறையும் காலை கண் விழிக்கும் போதும், இந்திய அணிக்காக வெற்றியை பெறப் போகிறோம் என்ற உணர்வே எனக்கு பெரும் உந்துதலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.