மும்பை: சர்வதேச கிரிக்கெட்டின் ஏலியன் என்று அனைத்து நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ். சச்சின் விளையாடினால் எப்படி எதிரணி ரசிகர்களும் ரசிப்பார்களோ, அப்படியான ஆட்டத்தைல் 90ஸ் கிட்ஸ்களுக்கு கண்முன் காட்டியவர்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தனி ராஜபாட்டையே நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து வெளியேறினார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய போது தனக்கு இருந்த பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் பற்றி ஏபி டிவில்லியர்ஸ் பேசியுள்ளார். யூ ட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் டிவில்லியர்ஸ் பேசுகையில், ஒவ்வொரு முறையும் முக்கியமான போட்டியில் களமிறங்குவதற்கு முந்தைய நாள் இரவில் எனக்கு தூக்கமே வராது. தூங்குவதற்காக போராட்டையே நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
அதனால் தூக்க மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கினே. ஒரு கட்டத்தில் அதுவே எனக்கு பிரச்சனையாக மாறியது. ஏனென்றால் தூக்க மாத்திரையை சாப்பிட்ட பின், தூக்கம் வராமல் என்னை நிதானமாக மாற்றியது. எனது கவலையை போக்குவதோடு, நல்ல சூழலில் இருப்பது போன்ற உணர்வை கொடுக்க தொடங்கியது. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளில் 162 ரன்களை விளாசினேன்.
மிகவும் முக்கியமான போட்டி என்று சொல்வதை விடவும், அந்தப் போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால் அந்தப் போட்டி முந்தைய நாள் இரவில் நான் வெறும் 2 முதல் 3 மணி நேரம் வரை தான் தூங்கினேன். அதிகாலை 3 மணியளவில் மருத்துவரை அழைத்து ஊசி போட்டுக் கொண்டேன். எனக்கு தூக்கமே வரவில்லை. அடுத்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் வந்த அழுத்தம், கவலையால் எனக்கு வயிற்றில் கிராம்ப் ஏற்பட்டது.
ஒவ்வொரு நாளும் ஹோட்டல் அறையில் தனியாக அமர்ந்து, நாளை நன்றாக விளையாட வேண்டும், மீண்டும் அதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும். அது கடைசி வரை எங்கும் நிற்கவில்லை. அதுவே எனக்கு கவலை ஏற்பட காரணமாக அமைந்தது. தூக்க மாத்திரைகள் இரு கட்டத்தில் பழக்கமாக மாறிவிடும். தேவையில்லாத நேரத்தில் கூட நாம் தூக்க மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கிவிடுவோம். அங்குதான் பிரச்சனை ஏற்படும். அதிர்ஷ்டவசமாக நான் விளையாடிய கடைசி 5 ஆண்டுகளில் வெளிவந்துவிட்டேன்.
இதுபோன்ற பிரச்சனைகள் யாருக்காவது ஏற்பட்டால், யாரிடமாவது சொல்லிவிடுங்கள். ஏனென்றால் நான் கிரிக்கெட் விளையாடிய போது தவறு செய்துவிட்டேன். எனது பலவீனங்களை பயிற்சியாளரிடமோ, கேப்டனிடமோ கூட வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நமது சுழலையும், பிரச்சனைகளையும் யாரிடமாவது வெளிப்படுத்த வேண்டியது அவசியம். நல்ல உடற்பயிற்சி, அதிகளவு தண்ணீர், சரியான தூக்கம் ஆகியவையே அடுத்த நாளில் வெற்றியை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.