லக்னோ: நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஓவரிலும் இரு மோசமான பந்துகளை வீசுவதை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. கடந்த முறை இந்த இரு அணிகள் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய போது, கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து டூ பிளஸிஸ் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி ஆல் ரவுண்டரான ஹர்சல் படேல் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு கடந்த போட்டிகளில் ஹர்சல் படேலின் மோசமான பவுலிங்கே காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஆர்சிபி அணி வீரர் ஹர்சல் படேல் பேசுகையில், நடப்பு ஐபிஎல் சீசனில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் மோசமாகவே செயல்பட்டுள்ளேன். நான் எப்படி பந்துவீச வேண்டும் என்று நினைத்தேனோ, அவ்வாறு பந்துவீசவில்லை. என் பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டிய தேவை உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில், என் இம்பேக்ட் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திற்கு பின்னரும், எனது பந்துவீச்சை நானாகவே ரிவ்யூ செய்வேன்.
அதில் ஒவ்வொரு முறை பந்துவீசும் போதும், ஒரு ஓவருக்கு இரு மோசமான பந்துகளை வீசுகிறேன். அதனை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் விக்கெட் வீழ்த்துவதற்கான சாதகங்களை ஏற்படுத்த வேண்டும். விராட் கோலியை பொறுத்தவரை கேப்டனாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.. அவரின் எனர்ஜி என்றும் குறையவே குறையாது. உலகம் முழுவதும் இருந்தும் விராட் கோலி மீதான அன்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.