புனே: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை 5 முறை வீழ்த்தி இருப்பது என் வாழ்வின் அதிர்ஷ்டம் என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுவரை இந்திய அணி ஆடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது.

அதேபோல் வங்கதேச அணி 3 போட்டிகளில் 2 தோல்வி ஒரு வெற்றியுடன் களத்தில் இருக்கிறது. இந்திய அணியின் பலத்திற்கு வங்கதேச அணி ஈடு இல்லை என்றாலும், 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியால் இந்திய அணி வீழ்த்தப்பட்டது. அதன்பின்னர் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டி சிறிய ரைவல்ரியாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது மட்டும் வங்கதேச அணி வீரர்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஷகிப் அல் ஹசனும் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். இதனால் வங்கதேச அணி வீரர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இதனால் நாளைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஐசிசி வீடியோவில் பேசியிருக்கிறார். அதில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஸ்பெஷலான பேட்ஸ்மேன். என்னை பொறுத்தவரை மாடர்ன் கிரிக்கெட்டில், மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான். அவரை என்னால் 5 முறை விக்கெட் வீழ்த்த முடிந்தது என் அதிர்ஷ்டம். அது எனக்கு நிறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் பற்றி விராட் கோலி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறேன். அவரது பந்துவீச்சில் கட்டுபாட்டுடன் இருக்கிறார். புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசக் கூடிய அவர், அனுபவம் வாய்ந்தவர். இவரை போன்ற வீரர்களுடன் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கு பிரஷரை கொடுத்து விக்கெட் வீழ்த்த கூடியவர்கள் பவுலர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார்.