மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரில் நேரடியாக அறிமுகம் செய்யப்படுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை என்று இளம் வீரர் திலக் வர்மா உற்சாகம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தங்களின் அசாதாரண ஆட்டத்தால் கவனம் ஈர்த்த வீரர்களில் முக்கியமானவர் திலக் வர்மா. கடந்த சீசனின் முதல் பாதியில் மும்பை அணியின் பேட்டிங்கை தனியாளாக தோளில் சுமந்தார். இதனால் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டை சிக்சருடன் தொடங்கிய திலக் வர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மொத்தமாக 173 ரன்கள் விளாசினார். அதேபோல் பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் திலக் வர்மா இந்திய அணியின் எதிர்காலத்திற்கான வீரராக பார்க்கப்பட்டார். இதனால் பலரும் திலக் வர்மாவை உலகக்கோப்பைத் தொடரில் விளையாட வைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணியில் திலக் வர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் திலக் வர்மாவுக்கு ஆசியக் கோப்பை போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆசியக் கோப்பைத் தொடரில் திலக் வர்மா ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திலக் வர்மா பேசுகையில், எந்த சூழல்களிலும் ரோகித் சர்மா என்னை விட்டுக் கொடுத்ததே இல்லை. நான் முதல்முறையாக ஐபிஎல் தொடர் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டட் போது, எனக்கு அழுத்தமில்லாமல் ஆட வேண்டும் என்று அட்வ்வைஸ் செய்தார். அதேபோல் எந்த உதவியாக இருந்தாலும் உடனடியாக அழைக்கலாம் என்று கூறியவர் ரோகித் சர்மா. அது எனக்கு ஊக்கமாக அமைந்தது.
அதேபோல், ஆசியக் கோப்பைத் தொடரில் நேரடியாக அறிமுகமாவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இந்த வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன். எனது முழு திறமையை வெளிப்படுத்து அனைத்து பயிற்சியையும் மேற்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.