எனக்குள்ள இன்னும் ஒரு உலகக் கோப்பை பாக்கி இருக்குங்க.. உத்தப்பாவின் ஏக்கம்
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் உலகில் குறுகிய காலத்தில் அதிகம் பேசப்பட்ட வீரர்களில் ராபின் உத்தப்பாவுக்கு ஒரு இடம் உண்டு. ஆனால் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கத் தவறியவர் உத்தப்பா.
Recommended Video
இந்த நிலையில் இன்னும் ஒரு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடக் கூடிய அளவுக்கு தான் ஆயத்தமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக உத்தப்பா கூறுகையில், ஒருவர் தனது திறமை மீது சந்தேகப்படக் கூடாது. அப்படி சந்தேகப்பட ஆரம்பித்தால் அது அவரை வீழ்த்தி விடும். அநீதி இழைத்தது போல ஆகி விடும் என்று கூறியுள்ளார்.
உங்களுக்கு நீங்களே அநீதி இழைக்கக் கூடாது, முடியாது என்றார் ராபின் உத்தப்பா. 2005ம் ஆண்டு பரபரப்பாக அறிமுகமானவர் ராபின் உத்தப்பா. அவர் சீனுக்கு வந்தபோதே அதிரடியாகத்தான் இருந்தது. இந்திய அணியில் இடம் பெற்று சில பல நல்ல ஸ்கோர்களையும் கூட எடுத்தார்.

சோபிக்கத் தவறினார்
சர்வதேச அரங்கில் அவர் பெரிய ரவுண்டு வருவார் என அனைவருமே உத்தப்பா குறித்து கணித்தனர். ஆனால் 2008ம் ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியது. 2008ம் ஆண்டு அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு பின்னடைவுதான். தொடர்ந்து தடுமாற்றத்தை சந்திக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஐபிஎல் போட்டிகள் கை கொடுத்தன. அதில் தனது முத்திரையைப் பதித்தார்.

எப்படி இருக்கும் எதிர்காலம்
இந்த நிலையில் தனது எதிர்காலம், திட்டங்கள், லட்சியம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார் உத்தப்பா. அதில், தன்னால் இன்னும் ஒரு உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காக ஆடும் உத்வேகம், வேகம் தன்னிடம் இன்னும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்களுடன் மோதணும்
இதுகுறித்து உத்தப்பா அளித்துள்ள பேட்டியில், நான் மீண்டும் போட்டியில் குதிக்க விரும்புகிறேன். எனக்குள் இன்னும் அந்த நெருப்பு இருக்கிறது. இப்போதைய இளம் வீரர்களுடன் போட்டியிட விரும்புகிறேன். நிச்சயம் என்னால் ஜொலிக்க முடியும். எனக்குள் இன்னும் ஒரு உலகக் கோப்பைக்கான வேகம் உள்ளது. அதை நான் நம்புகிறேன். நம்மையே நாம் நம்பாவிட்டால் அது நமக்கு நாமே இழைத்துக் கொள்ளும் ஆநீதியாகும் என்றார் அவர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்
ராபின் உத்தப்பா முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர். அதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், புனே வாரியர்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்று ஆடினார். இந்த ஆண்டு சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்குவது தாமதமாகி வருவதால் உத்தப்பாவுக்கும் ஏமாற்றம்தான்.

இன்னும் நம்பிக்கை இருக்கு
34 வயதாகும் உத்தப்பா, 2007ல் நடந்த முதலாவது ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்றார். அப்போது இருந்த அதே உத்வேகம் தற்போதும் தனக்கு இருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எல்லாம் சரிதான்... ஆனால் இங்கே தோனிக்கே டப்பா டான்ஸ் ஆடுகிறது. இந்த நிலையில் ராபின் உத்தப்பாவுக்கு லக் பரிவு காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications