லண்டன்: இந்திய வீரர் சுப்மன் கில் கொடுத்த கேட்சை கேமரூன் க்ரீன் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த கேட்ச் குறித்து ஆஸி. அணியின் கேமரூன் க்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 444 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை விரட்ட இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், போலாந்த் வீசிய பந்தில் சுப்மன் கில் பேட்டில் எட்ஜாகியது. அதனை கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்தார். இருப்பினும் கள நடுவர்களுக்கு கேட்ச் மீதான நம்பகத்தன்மை இல்லாததால், மூன்றாவது நடுவர் முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தது.

கேமரூன் க்ரீன் பிடித்த கேட்சை சில நிமிடங்கள் மீண்டும் மீண்டும் திரும்ப பார்த்த மூன்றாம் நடுவர், அதிர்ச்சியளிக்கும் வகையில் அவுட் என்று அறிவித்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் ரசிகர்கள் பலரும் விரக்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து கேமரூன் க்ரீன் கேட்ச் புகைப்படம் வெளியாகி உண்மை தெரிய வந்தது. அதில் பந்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே கேமரூன் க்ரீனின் கைகள் இருந்தது. இன்னொரு பக்கம் பந்து தரையில் இருந்தது தெரிய வந்தது.
இந்த கேட்சிற்கு வழக்கம் போல் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்க, இந்திய வர்ணனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணியை பார்த்து, சீட்டர்.. சீட்டர் என்று கோஷம் எழுப்ப தொடங்கினர். இந்த கோஷம் கேமரூன் க்ரீன் பந்துவீச வந்த போது உச்சமடைந்தது. இதையடுத்து சுப்மன் கில், தனது ட்விட்டர் பக்கத்திலேயே நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் க்ரீன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது சுப்மன் கில் கேட்ச் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சுப்மன் கில் கொடுத்த கேட்சை பிடித்த தருணத்தில் சரியாக பிடித்ததாகவே நினைத்தேன். அதனால் அந்த நேரத்தில் எனக்கு கேட்சை சரியாக பிடித்தேனா என்ற எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. அதன்பின்னர் கேட்ச் பற்றிய முடிவை மூன்றாம் நடுவரிடம் விட்டுவிட்டோம். அவர் ஒப்புக் கொண்டு அவுட் கொடுத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.