அகமதாபாத்: ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா பந்துவீச்சில் சிக்சர் அடிப்பேன் என்று விடுத்த சவாலில் வெற்றிபெற்றுள்ளதாக குஜராத் அணியின் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. குஜராத் அணியின் வெற்றிக்கு இளம் வீரர் சுப்மன் கில் அடித்த அதிரடியான சதமே காரணமாக அமைந்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக ஆட்டநாயகனாகவும் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து சுப்மன் கில் பேசுகையில், ஐதராபாத் அணிக்கு எதிராக தான் ஐபிஎல் தொடரில் நான் அறிமுகமானேன். தற்போது என் முதல் சதத்தையும் ஐதராபாத் அணிக்கு எதிராகவே விளாசி இருக்கிறேன். இன்னும் ஏராளமான சதங்கள் வரும் என்று நம்புகிறேன். நான் பேட்டிங் செய்யும் போது பவுலர்களையும், சூழலையும் மட்டுமே பார்த்து விளையாடுவேன். கடந்த போட்டியில் என்ன நிகழ்ந்தது என்பதை பற்றி சிந்திக்கவே மாட்டேன். ஏனென்றால் நமக்கு முன் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம்.
அதேபோல் இன்றைய ஆட்டத்தில் நான் ஒரேயொரு சிக்சரை தான் விளாசி இருந்தேன். அந்த சிக்சர் அபிஷேக் சர்மாவுக்கு எதிராக வந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஏனென்றால் அபிஷேக் சர்மாவிடம், நீ பந்துவீசினால் நிச்சயம் சிக்சர் அடிப்பேன் என்று கூறி இருந்தேன். சொன்னது போல் சிக்சர் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பஞ்சாப் அணிக்காக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக ஒன்றாக விளையாடியவர்கள். அந்த நட்பை ஏராளமான முறை ஐபிஎல் களத்திலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து சுப்மன் கில் பேசுகையில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் தான் என் ரோல் மாடல்கள். அவர்கள் உத்வேகம் அளிப்பதும் இவர்கள் இருவரும்தான். நான் 12 வயதில் இருந்து விராட் கோலியை தான் அதிகமாக பின்தொடர்ந்து வருகிறேன். அவரிடம் இருந்து ஏராளமானவற்றை கற்று வருகிறேன். கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் எனக்கு ஊக்கமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.