இஸ்லாமாபாத்:சச்சினின் பேட்டில் தான் முதல் சதம் அடித்ததாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி அதிரடியாக கூறியுள்ளார்.
1996ம் ஆண்டு 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தியவர் அப்ரிடி. அண்மையில் இவர் எழுதியுள்ள கேம் சேஞ்சர் என்ற நூலால் பலரின் தூக்கம் கெட்டுவிட்டது. தமது முதல் சதம் எப்போது அடிக்கப்பட்டது, அப்போது என்ன வயது என்று பல விஷயங்களை அதில் அவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான மேட்சில் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் முஸ்தாக் அகமது விளையாட வில்லை. எனவே அவருக்கு பதிலாக அப்ரிடிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த முதல் போட்டியிலேயே அப்ரிடி அதிரடி காட்டி 37 பந்துகளில் சதமடித்து வரலாற்று சாதனையை படைத்தார்.
இதுபற்றி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டை வக்கார் யூனிஸிடம் கொடுத்ததாகவும், வக்கார் யூனிஸ் அந்த பேட்டை தன்னிடம் கொடுத்ததாகவும், அதைக்கொண்டு பயிற்சி எடுத்துதான், தனது முதல் மேட்சில், தான் முதல் சதம் எடுத்ததாகவும் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த சதத்தை அடிக்கும்போது தனக்கு 16 வயது என்று அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அதில் உண்மையில்லை என்றும், 1975ல் பிறந்த தனக்கு அந்த மேட்சில் 19 வயதாகியிருந்ததாகவும் அப்ரிடி கூறியுள்ளார். ஏற்கனவே அந்த புத்தகத்தால் பலரது தலைகள் உருண்டு கொண்டு இருக்க.. இப்போது அவர் வெளியிட்டுள்ள இந்த தகவலால் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.