லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் விக்கெட்டை சிராஜ் வீழ்த்திய போது, தூங்கிக் கொண்டிருந்தது பற்றி சக ஆஸி. வீரரான லபுஷேன் விளக்கம் அளித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரரான விவியன் ரிச்சர்ஸ் டாஸ் வென்ற பின், தொடக்க வீரர்களான ஹெய்ன்ஸ் மற்றும் கிரீனிட்ஜை பேட்டிங் செய்ய அனுப்பிவிட்டு, தூங்குவதற்காக படுக்கைக்கு சென்றுவிடுவாராம். இது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்கள் சொல்லிய உண்மையான கதை.
ஹெய்ன்ஸ் மற்றும் கிரீனிட்ஜ் தொடக்க வீரர்களாக இருந்தால், ரிச்சர்ட்ஸ் மட்டுமல்ல, எந்த கேப்டனாக இருந்தாலும் நிம்மதியாக தூங்கலாம். ஆனால் டேவிட் வார்னரை தொடக்க வீரராக வைத்துக் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் லபுஷேன் தூங்க முயற்சிக்கலாமா.. அப்படி தூங்கியதால் ஒரே நாளில் உலகம் முழுக்க டிரெண்டிங்கில் இருக்கிறார் ஆஸி. அணியின் மார்னஸ் லபுஷேன்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 3ஆம் நாளின் நீண்ட நேரம் ஃபீல்டிங் செய்ததால், லபுஷேன் களைப்பாக காணப்பட்டார். இதனால் இந்திய அணி ஆல் அவுட்டானதால், சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்த லபுஷேன், பேட் கட்டிக் கொண்டு கால்களை நீட்டி கண் அயர்ந்து தூங்கினார். இது கேமராமேனின் கண்களில் பட, அதனை லைவில் காட்டினார்.
ஆனால் மிரட்டலாக பந்துவீசி வந்த சிராஜ், டேவிட் வார்னரை 1 ஒரு ரன்னில் வீழ்த்தினார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் உற்சாகம் பொங்க ஆரவாரம் செய்ய, அதிக சத்தத்தால் லபுஷேன் கண் விழித்து பார்த்தார். அப்போது டேவிட் வார்னர் ஆட்டமிழந்தது தெரிந்த பின், உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்கினார். இதுவும் தொலைக்காட்சியில் நேரலையில் காட்டப்பட்டது.
போதாக்குறைக்கு வர்ணனை செய்துகொண்டிருந்த ஹர்ஷா போக்ளேயும், தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டீர்களா லபுஷேன்? காபி குடித்துவிட்டீர்களா? என்று வர்ணனை செய்து கலாய்த்தார். இதனை வைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தூங்கியது குறித்து லபுஷேன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து லபுஷேன் பேசுகையில், டெஸ்ட் போட்டியின் அனைத்து பந்துகளையும் பார்க்க முடியாது. நான் அந்த பந்துகளுக்கு இடையே சிறிது நேரம் என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். சிராஜ் முதல் விக்கெட்டை வீழ்த்திய போது, நான் முழுமையாக ஓய்வில் இல்லை. அதனால் விரைவாகவே களத்தில் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.