டெஸ்ட் தொடர் வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை அடைந்தது. இதையடுத்து விராட் கோலி நாடு திரும்பிய நிலையில் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து இந்தியாவை 2க்கு 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற செய்துள்ளார் ரஹானே.
சதமடித்த ரஹானே
கடந்த மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இவர் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தியதுடன் அந்த போட்டியில் சதமடித்தார். அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரது ஆட்டமும் காரணமாக அமைந்தது. இந்த வெற்றியே தொடரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
உத்வேகமாக அமைந்த ஆட்டம்
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டு நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் மெல்போர்னில் விளையாடுவதற்கு முன்னதாக அதே மைதானத்தில் கடந்த 1999ல் நடைபெற்ற போட்டியில் சச்சின் விளையாடி 116 ரன்களை அடித்த ஆட்டமே இந்த போட்டியை எதிர்கொள்ள தனக்கு உத்வேகமாக அமைந்ததாக ரஹானே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பார்த்த ரஹானே
போட்டிக்கு முன்னதாகவும் போட்டி நடக்கும் அன்றைக்கு காலையிலும் சச்சின் டெண்டுல்கரின் இந்த ஆட்டத்தை தான் தொடர்ந்து வீடியோவில் பலமுறை பார்த்ததாகவும் அவரது ஆட்டம் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததாகவும் ரஹானே மேலும் கூறினார்.