கொல்கத்தா: ஓய்வு குறித்து தொடர்ந்து கேட்கிறார்கள். எத்தனை முறை கேட்டாலும் என்னிடம் ஒரே பதில்தான். நான் இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என்று இந்திய ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 அணியின் கேப்டன் டோணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பும் கூறினேன். சில வாரங்களுக்கு முன்பும் கூட கூறினேன். இப்போதும் கூறுகிறேன். கேள்விகள் ஒன்று என்பது போல எனது பதிலும் ஒன்றுதான். இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. அதில் மாற்றம் இல்லை.

யார் கேட்டாலும், எங்கு கேட்டாலும் இதுதான் எனது பதில். உங்களது பெயர் என்ன என்று கேட்டால் டோணி என்று கூறுவேன். அது போலத்தான் இந்தக் கேள்விக்கும் இதே பதில்தான். மாற்றமே இல்லை.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இப்போதைக்கு நான் ஓய்வு பெற சாத்தியம் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு சூழலும் எழவில்லை. தொடர்ந்து ஆடுவேன்.
கேள்விகள் இருக்கத்தான் செய்யும். கேட்பது அவர்களது உரிமை. ஆனால் எனது பதில் ஒன்றேதான். அது எனது உரிமை. அதேசமயம் எல்லா கேள்விகளையும் கேட்க யாருக்கும் உரிமை இல்லை. யாரும் யாரையும் நிர்பந்தப்படுத்த முடியாது.
சிலருக்கு கேள்வி கேட்கும் வசதி கிடைத்து விடுகிறது. அதற்காக நிறைய கேட்டு விடுகிறார்கள். அது தவறு. வாய்ப்பு கிடைத்ததே என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. இது மீடியா உலகம். எல்லாவற்றையும் கவர் செய்கிறது மீடியா என்றார் டோணி.