மும்பை: பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் விதிமுறைகளுடன் விளையாடப்படும் இன்றைய கிரிக்கெட் போட்டிகள் மிகப்பெரிய மோசடி என்று பாகிஸ்தான் ஜாம்பவான் சோயிப் அக்தர் தெரிவித்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 500 சிக்சர்களுக்கு மேல் அடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்னும் லீக் போட்டிகளே முழுமையாக முடிவு பெறாத நிலையில், இவ்வளவு சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உலகக்கோப்பை தொடரா அல்லது ஐபிஎல் தொடரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

50 ஓவர்கள் கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள், 30 யார்ட் எல்லைக்கு பின் 5 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி, பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்று முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாட்டு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பவுலர்கள் ஏதோ பவுலிங் மெஷினை போல் ஓடி வந்து வீசுவதை கடந்து எதையும் பெரியளவில் செய்ய முடிவதில்லை.
ஒவ்வொரு 25 ஓவருக்கும் புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால், வேகப்பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் என்ற திறனையே மறக்கும் அளவிற்கு சூழல் மாறிவிட்டது. இதன் காரணமாகவே இங்கிலாந்து போன்ற அணிகள் உலகக்கோப்பை தொடரிலும் கூட பவுலர்கள் மீது நம்பிக்கை வைக்காமல் 11 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கி வருகிறது.
டி20 கிரிக்கெட் மனநிலையிலேயே ஒருநாள் கிரிக்கெட்டையும் பல்வேறு அணிகள் அணுகி வருகின்றன. இதன் காரணமாகவே இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், இன்றைய கிரிக்கெட் போட்டிகள் மிகப்பெரிய மோசடி என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதில், தற்போது விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகள் மிகப்பெரிய மோசடி. ஒருநாள் போட்டிகளில் 2 புதிய பந்துகளை அறிமுகம் செய்த பின் பேட்ஸ்மேன்கள் 30 ஆயிரம் ரன்களை எளிதாக விளாசுகின்றனர். இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கர், இம்சமாம் உல் ஹக், முகமது யூசுப், ஜாக் காலிஸ் உள்ளிட்டோர் மீதான மரியாதை அதிகரிக்கிறது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் 50 ஓவர்கள் கிரிக்கெட்டை ஒரே பந்தில் ஆடியவர்கள்.
பந்து தேய்மானமடைந்த பின் வாக்கர் யூனுஸ், வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக் உள்ளிட்டோர் என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் பார்த்துள்ளோம். கிரிக்கெட்டில் ரன்கள் சேர்க்கும் வீரர்களை நிச்சயம் பாராட்டுவேன். ஆனால் 30 யார்ட் வளையத்திற்கு வெளியில் 6 வீரர்கள் இருக்கும் போது ரன்கள் சேர்க்க வேண்டும். அப்போது தெரியும் ரன்கள் சேர்ப்பது எவ்வளவு கடினம் என்று தெரிவித்துள்ளார்.