மும்பை : 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் உலகளாவிய தூதராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நியமித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 முதல் இந்தியாவில் இந்த உலகக்கோப்பை தொடர் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
மொத்தம் 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பை தொடரின் தூதுவராக போட்டியை ஏற்று நடத்தும் அணியின் முன்னாள் வீரர் ஒருவரை ஐசிசி தேர்வு செய்யும்.
அந்த வகையில் இந்த முறை இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரரும், ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
இது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர், இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரால் பல இளம் சிறுவர், சிறுமியர் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்து ஆடத் துவங்குவார்கள் என கூறி இருக்கிறார்.
மேலும், தான் 1987 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது பந்தை எடுத்துப் போடும் சிறுவனாக மைதானத்தில் பணியாற்றிய நினைவுகளையும் பகிர்ந்தார்.
உலகக்கோப்பை தொடரில் பந்தை எடுத்துப் போட்ட சிறுவனாக இருந்து, பின் 2011இல் உலகக்கோப்பை வென்றது தான் தன் கிரிக்கெட் வாழ்வின் மணிமகுடம் என அவர் உலகக்கோப்பை குறித்த தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
சச்சின் உலக அளவிலான தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அணிகளில் இருந்தும் முன்னாள் ஜாம்பவான்களையும் கவுரவப்படுத்தும் வகையில் அவர்களை ஐசிசி வல்லுநர் குழு உறுப்பினர்களாக அறிவித்துள்ளது.
அவர்கள் போட்டிகள் குறித்த தங்கள் பார்வையை கூறுவார்கள். ரசிகர்களோடு கலந்துரையாடுவார்கள் எனவும் கூறி உள்ளது ஐசிசி. அந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளவர்கள் விவரம்.
மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து உலகக் கோப்பை வென்ற கேப்டன் இயான் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, முன்னாள் மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் பாகிஸ்தான் ஆல் - ரவுண்டர் முகமது ஹபீஸ்.