துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த இரண்டு வாரங்களாக ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுத்து வந்தது. உலகின் டாப் எட்டு அணிகள் மோதும் இந்த தொடர் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நெருங்கி வருகிறது.
குரூப் ஏ வில் நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம் பாகிஸ்தான் அணிகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளும் மோதின. தற்போது 11 போட்டிகள் முடிவடைந்த நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்ல போகிறது என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி குரூப் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்தும் இந்திய அணியும் குரூப் பி பிரிவில் தென்ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்று உள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அணி, குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
அதன் போல் குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ள அணி, குரூப் a வில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். அந்த வகையில் நான்கு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், எந்த அணி எந்த இடத்தை நிறைவு செய்தது என்ற தெளிவு ஞாயிறு இரவு தெரியும். அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அவர்கள் முதலிடத்தை நிறைவு செய்வார்கள்.
ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தை நிறைவு செய்யும். இதே போல் இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் நாளை மோத உள்ள நிலையில் இதில் இந்தியா வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடிக்கும். தோல்வி அடைந்தால் இரண்டாவது இடத்தில் நீடிக்கும். அந்த வகையில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை மோதவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை இந்தியா நாளைய ஆட்டத்தில் தோற்றால் அவர்கள் தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்திய அணி விளையாடும் அரையிறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை மார்ச் 4ஆம் தேதி துபாயிலும், நியூசிலாந்து அணி மோதப் போகும் அரையிறுதி ஆட்டம் புதன்கிழமை 5ஆம் தேதி லாகூரிலும் நடைபெறும்.