லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது அந்தச் சுற்றில் இந்தியா யாரை எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
ஏனென்றால் இன்னும் ஒரு அணி கூட அரை இறுதி சுற்றுக்கு வரவில்லை. இதன் காரணமாக இந்தியா எந்த அணியை அரை இறுதியில் எதிர்கொண்டால் எளிதாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கணிக்க தொடங்கி விட்டார்கள்.

அரையிறுதியில் இந்திய அணி பெரும்பாலும் தென்னாபிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை அரை இறுதியில் எதிர்கொள்ள இந்திய அணி பயப்படும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேசன் கில்லஸ்பி தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் "இந்திய அணி தொடர்ந்து துபாயில் விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது."
"துபாய் ஆடுகளம் எவ்வாறு இருக்கும். களச் சூழல் எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இதை வைத்து எந்த வீரர்களை அணியில் தேர்வு செய்வது என்பது குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள். இதே போன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல வேண்டும் என்பது அனைத்து வீரர்களின் கனவாக நிச்சயம் இருக்கும்."
"இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு சென்று விட்டது. இந்திய அணியை வீழ்த்துவது என்பது கடினமாக தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியா எதிர்கொள்ள இந்திய அணி நிச்சயம் பயப்படும்" என்று கில்லஸ்பி கூறியுள்ளார். 2023 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொண்டு தோல்வியை தழுவியது.
இதன் மூலம் உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இந்தியா பைனலில் இழந்தது. இதனை சுட்டிக்காட்டியே கில்லஸ்பி இவ்வாறு தெரிவித்திருக்கிறார். எனினும் இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய ரசிகர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்துவோம் என கூறிய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணி வீரர்கள் முதல் சுற்றிலே வெளியேறியது போல் ஆஸ்திரேலியாவும் அரை இறுதியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.