துபாய்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான அயர்லாந்து கிரிக்கெட் அணியில் ஒரு வீரர் மாற்றப்பட்டுள்ளார். டிம் முர்டாக் என்ற வீரருக்குப் பதில் மேக்ஸ் சோரன்சன் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான அனுமதியை ஐசிசி கிரிக்கெட் டெக்னிக்கல் கமிட்டி அளித்துள்ளது.
பிப்ரவரி 14ம் தேதி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. இதற்கான 14 கிரிக்கெட் அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் அயர்லாந்து அணியில் ஒரு வீரர் மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த முர்டாக் என்ற வீரருக்கு திடீரென வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதில் மேக்ஸ் சோரன்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான அனுமதியை ஐசிசியிடம் அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டிருந்தது. அதற்கு தற்போது ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
29 வயதான மேக்ஸ், இதுவரை அயர்லாந்துக்காக 8 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 97 ரன்கள் எடுத்துள்ளார். 12 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இவர் கடைசியாக 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் கலந்து கொண்டு ஆடியுள்ளார்.
காயம் அல்லது உடல் நலக்குறைவு காரணமாக வீரர்களை மாற்ற அணிகளுக்கு உரி்மை உண்டு. அந்த மாற்றங்களை ஐசிசியின் டெக்னிக்கல் கமிட்டி பரிசீலித்து அனுமதி அளிக்கும். அதேசமயம், நீக்கப்பட்ட வீரர் மீண்டும் அணியில் சேர முடியாது.
அயர்லாந்து அணி உலகக் கோப்பைப் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், தெந் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அயர்லாந்து அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 16ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளை நெல்சன் நகரில் சந்திக்கவுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளில் வீரர் ஒருவரை மாற்றியுள்ள முதல் அணி அயர்லாந்துதான்.