துபாய் : கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்சுக்கு ஆறு ஆண்டுகள் தடையை ஐசிசி விதித்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 71 டெஸ்ட், 270 ஒரு நாள் மற்றும் 67 டி20 போட்டிகளில் மார்லன் சாமுவேல்ஸ் விளையாடி இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றதற்கு மார்லன் சாமுவேல்ஸ் முக்கியமான காரணமாக அமைந்தார்.

இரண்டு இறுதிப் போட்டியிலும் இவர்தான் அதிகபட்ச ஸ்கோரை அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் மார்லன் சாமுவேல்ஸ் அடித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற T10 லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் விளையாடினார்.
அப்போது 65 ஆயிரம் ரூபாய்க்கு கிரிக்கெட் சூதாட்ட தரகர்களிடமிருந்து சாமுவேல்ஸ் கூப்பன்களாக பெற்றதாக தெரிகிறது. ஆனால் இது குறித்து ஐசிசி நடத்திய விசாரணையில் சாமுவேல்ஸ் பங்கு பெறவில்லை. பலமுறை விசாரணைக்கு அழைத்தும் அவர் வராத நிலையில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்களிடமிருந்து எந்த மாதிரியான நன்மைகளை அனுபவித்தேன் என்பது குறித்தும் சாமுவேல்ஸ் தெரிவிக்கவில்லை.
ஒரு வீரரை கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் அணுகினால் அது குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும். அதையும் சாமுவேல்ஸ் செய்ய தவறி இருக்கிறார்.இதன் காரணமாக சாமுவேல்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மார்லன் சாமுவேல்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடைசியாக 2018 ஆம் ஆண்டு விளையாடினார்.
2020 ஆம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து மார்லன் சாமுவேல்ஸ் ஓய்வு பெற்று விட்டார். மார்லன் சாமுவேல்ஸ், இதுபோல் சூதாட்ட புகாரில் சிக்குவது முதல் முறையல்ல. அவர் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட் புரோக்கர்களிடமிருந்து காசு வாங்கியதற்காக இரண்டு ஆண்டு ஐசிசி இருந்து தடை பெற்று மீண்டும் அதிலிருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.