மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஐசிசி Hall of fame என்ற அந்தஸ்தை வழங்கி கௌரவிக்கும். கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளையும் ரசிகர்களின் அன்பையும் பெற்று கிரிக்கெட் பெரிய அளவில் வளர காரணமாக இருந்த வீரர்களுக்கு இந்த ஹால் ஆஃப் ஃபேம் என்ற கவுரவம் வழங்கப்படும்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் யாருக்கு வழங்கப்பட போகிறது என்பதை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 113 வது வீரராக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குக், தமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக இதை கருதுகிறேன். கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்த சிறந்த வீரர்களுக்கு கிடைத்த கௌரவம் தற்போது எனக்கும் கிடைத்திருப்பதை நினைத்து நான் அதிர்ஷ்டவசமாக நினைக்கின்றேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது என் வாழ்நாள் பெருமையாக நினைத்தேன்.
தற்போது இந்த விருதும் அந்த பட்டியலில் இணைந்து இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் அலெஸ்டர் குக் தொடரில் 766 ரன்கள் குவித்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதேபோன்று 2012 இந்தியாவில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறவும் முக்கியமாக இருந்தார். இதைப் போன்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, அதி வேகமாக சதம், அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டை ஒரு அணியால் விளையாடப்படும் விளையாட்டாக இருந்தாலும், தனி நபர்கள் சாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. களத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு நாமே பொறுப்பு.
எனக்கு இந்த கௌரவம் கிடைத்ததற்கு என்னுடைய ரசிகர்கள் பயிற்சியாளர்கள் சக வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதேபோன்று மகளிர் கிரிக்கெட் வீராங்கனை இந்தியாவைச் சேர்ந்த நீட்டு டேவிட்க்கும் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான தோனிக்கு ஏன் இன்னும் ஐசிசி ஹால் ஆப் பேம் விருது வழங்கப்படவில்லை என்று இந்திய ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகள் கழித்து தான் இந்த விருது வழங்கப்படும். தோனி ஓய்வு பெற்று தற்போது நான்கு ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது. இதனால் 2025 ஹால் ஆப் பேம் விருது வழங்கும் போது தோனி அதில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.