மும்பை : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது.
இரண்டாவது டெஸ்டில் ஜெய்ஸ்வாலும் முகமது சிராஜும் அபாரமாக செயல்பட்டதால் தற்போது தரவரிசை பட்டியலில் அவர்கள் முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.
ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 80 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களும் சேர்த்த நிலையில் தற்போது பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் அவர் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார்.இதேபோன்று இரண்டாவது டெஸ்டில் சதம் விளாசிய விராட் கோலி 14 வது இடத்தில் நீடிக்கிறார்.

இதேபோன்று இரண்டாவது டெஸ்டில் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 57 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 37 ரன்களும் எடுத்த நிலையில் 10 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்திலும் ஆஸ்திரேலியா வீரர் லாபஸ்சேன் நான்காவது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் தற்போது இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முகமது சிராஜ் 33 இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் எதிராக அவர் முதலில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அவர் சிங்கப்பாய்ச்சலை பாய்ந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் ஜடேஜா நீடிக்கிறார்.
தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்கா வீரர் ரெபாடா இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த நிலையில் இனி இந்திய அணி ஆறு மாதங்கள் கழித்து தான் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் மற்ற அணிகள் கூட இனி டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவாக விளையாடவில்லை. இதனால் தரவரிசையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது.