அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் மோத இருக்கும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் ஷர்துல் தாக்குரை ஆட வைக்கவே கேப்டன் ரோஹித் சர்மா விரும்புகிறார்.
ஷர்துல் தாக்குர் விக்கெட் எடுக்கும் பவுலர் என்ற பெயரை பெற்று இருக்கிறார். ஆனால், அதில் ஒரு ஆபத்தும் உள்ளது. அவர் அதிக ரன்களை வாரிக் கொடுக்கிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இதே தான் நடந்தது. இந்தியாவின் கடந்த உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வாய்ப்பு பெற்ற ஷர்துல் தாக்குர் அந்தப் போட்டியிலும் 6 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்தே 1 விக்கெட் வீழ்த்தினார்.
இன்னொரு முக்கியமான விஷயம் ஷர்துல் தாக்குர் போட்டியின் துவக்கத்திலும், கடைசியிலும் பந்து வீசுவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. மாறாக 10 ஓவர்களுக்கு மேல், 40 ஓவர்களுக்கு உள் அவர் வீசும் ஓவர்களில் விக்கெட் எடுக்கிறார். ஆனால், இந்த ஓவர்களில் தான் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அதில் கோட்டை விட்டு விடுவார்.
கிரிக்கெட் விமர்சகர்கள் முதல் சாதாரண ரசிகன் வரை ஏன் அனுபவம் வாய்ந்த, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முகமது ஷமிக்கு கேப்டன் ரோஹித் சர்மா போட்டிகளில் ஆடும் வாய்ப்பை அளிக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கான பதிலே இல்லை. ஷமி, ஆட்டத்தின் துவக்கம், இறுதி, மத்திய ஓவர்கள் என எப்போது வீசினாலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர்.
ஆனால், பும்ரா, முகமது சிராஜ் மீது வைக்கும் நம்பிக்கையை ஷமி மீது வைக்க மறுக்கும் ரோஹித் சர்மா, அவரை மாற்று வேகப் பந்துவீச்சாளராகவே அணியில் வைத்துள்ளார். ஆனால், ஷர்துல் தாக்குரை அதிகமாக நம்பி ரிஸ்க் எடுக்கிறார் ரோஹித்.
மிக தீவிரமான இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை என்ற நிலையில், ரோஹித் சர்மா பும்ரா, சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்குரையே ஆட வைக்க வாய்ப்பு அதிகம். ஸ்பின்னர்களாக ஜடேஜா, குல்தீப் யாதவ் அணியில் ஆடுவார்கள். அஸ்வினுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கடினம்.