பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 54 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், ரெண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு வார ஓய்வுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியது. இதில் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஒரு வாரம் ஓய்வெடுத்திருப்பதால் இந்த போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரோகித் சர்மா கூறினார். இந்திய அணி வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலில் பேட்டிங் தேர்வு செய்த ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி பட்டையை கிளப்பினார். முதல் விக்கெட் ரோகித் சர்மா கில் ஜோடி 100 ரப்களை சேர்த்தது.
இந்த நிலையில் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் மட்டும் மூன்று மிகப்பெரிய ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார். அதை என்னவென்று தற்போது பார்க்கலாம். உலகக்கோப்பை வரலாற்றிலே அதிக முறை 500 ரன்கள் குவித்த வீரர்கள் என்ற சச்சினின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்து இருக்கிறார்.சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இரண்டு முறை 500 ரன்கள் அடித்திருந்தார்.
தற்போது ரோகித் சர்மா 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் அடித்து அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார். மேலும் தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு சேர்ந்திருக்கிறது. இதேபோன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 500 ரன்கள் கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பாக இந்திய கேப்டன்களில் கங்குலி மட்டும்தான் அதிகபட்சமாக 465 ரன்கள் அடித்திருந்தார். அதற்கு முன்பு விராட் கோலி 2019 ஆம் உலக கோப்பையில் 443 ரன்கள் அடித்திருந்தார். தற்போது இவர்கள் சாதனையை ரோகித் சர்மா முறியடித்து 500 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். இதேபோன்று உலகக்கோப்பை வரலாற்றில் 50 ரன்கள் அதிகம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 21 முறை சச்சினும், 14 முறை விராட் கோலியும் அடித்துள்ள நிலையில் ரோகித் சர்மா 13 முறை அடித்து தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.