லக்னோ : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்த போது கையில் காயம் ஏற்பட்டது.
அவர் வலியால் துடித்த நிலையில், உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்தார். ரோஹித் சர்மாவால் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஏற்கனவே காயம் அடைந்த அதே கையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி உள்ள நிலையில், ரோஹித் சர்மாவால் இங்கிலாந்து போட்டியில் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா பீல்டிங் செய்த போது வழுக்கி விழுந்தார். அப்போது அவர் வலது கை விரல்களில் காயம் ஏற்பட்டது. அந்த விரல்களுக்கு கட்டு போட்டு கொண்டு அப்போது ரோஹித் களத்துக்கு வந்தார். அது பெரிய காயம் இல்லை என்பதால் அப்போது சமாளித்து விட்டார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக லக்னோவில் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட போது அவர் வலது கை மணிக்கட்டில் பந்து தாக்கியது. அதனால், வலியில் துடித்தார். உடனே அருகே இருந்த பிசியோதெரபிஸ்ட் ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்தார். அதன் பின் என்ன நடந்தது என்ற தகவல் தெரியவில்லை.
ஏற்கனவே, இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். அதனால், இந்திய அணி அவருக்கு இணையான வீரர் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷமியை அணியில் சேர்த்து சமாளித்தது. தற்போது கேப்டன் ரோஹித் சர்மாவும் காயத்தில் சிக்கினால் இந்திய அணியின் நிலைமை மோசமாகி விடும்.
இந்தியா - இங்கிலாந்து போட்டி, இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மாவின் நூறாவது போட்டி ஆகும். மேலும், இந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இதுவரை ஐந்து போட்டிகளில் 311 ரன்கள் குவித்துள்ளார். இதன் பேட்டிங் சராசரி 62.20 ஆகும். மேலும், 18,000 சர்வதேச ரன்களை நெருங்கி இருக்கிறார் ரோஹித் சர்மா.