மும்பை : இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், பந்துவீச்சில் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா ஆறாவது பந்துவீச்சாளராக செயல்பட்ட நிலையில், இந்திய அணி அவர் இல்லாமல் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் ஆடி வருகிறது.
ஏற்கனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா இந்த சிக்கலை எதிர்கொண்டு சமாளித்தது. அதே போன்ற ஒரு நிலை, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஏற்படலாம்.
இந்த நிலையில் தான், விராட் கோலி அணிக்கு கை கொடுக்க முன் வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இனி பந்துவீசவே மாட்டேன் என முடிவு செய்து இருந்த கோலி, அணிக்காக ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டதால் பகுதி நேர பந்துவீச்சாளராக செயல்பட ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹர்திக் பாண்டியா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்தார். அவர் அணியில் இருந்தவரை ஐந்து ஓவர்களாவது ஒவ்வொரு போட்டியிலும் பந்து வீசினார். ஆனால், அவர் இல்லாத நிலையில், இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஸ்க் எடுத்து ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

அப்போது குல்தீப் யாதவ் ஓவர்களை குறி வைத்து நியூசிலாந்து அணி ரன் குவித்தது. ஆனால், அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்ததால் ஒருவருக்கு 10 ஓவர் என்ற அடிப்படையில் அனைவரும் தங்களின் 10 ஓவர்களை வீசியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், குல்தீப் யாதவ் ரன்னை வாரி வழங்கிய போதும் தொடர்ந்து பந்து வீசினார். அந்தப் போட்டியில் இந்தியா வலுவான பேட்டிங் இருந்ததால் வெற்றி பெற்றது.
அதே போன்ற நிலை இங்கிலாந்து போட்டியில் ஏற்பட்டால் நிலைமை வேறாக இருக்கும். இங்கிலாந்து அணி வீரர்கள் இதுவரை சரியாக ஆடாத போதும், இந்தியாவுக்கு எதிராக அவர்கள் ஃபார்முக்கு வந்தால் நிச்சயம் அதிக ரன்களை குவிக்க திட்டமிடுவார்கள். அந்த அணியில் கடைசி பேட்ஸ்மேன் வரை அதிரடி ஆட்டம் ஆடும் இயல்பு உள்ளவர்கள் என்பதால் இந்தியா நிச்சயம் ஆறாவது பந்துவீச்சாளருடன் தான் களமிறங்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் பாண்டியா இல்லாததால், சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை வலுப்படுத்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால், எப்படியும் ஆறு பேட்ஸ்மேன்கள், ஐந்து பந்துவீச்சாளர்கள் என்ற கணக்கில் தான் அணித் தேர்வை செய்ய வேண்டும். ஜடேஜா மட்டுமே ஆல் ரவுண்டராக இருப்பார். மோசமாக பந்து வீசி வரும் ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை.
எனவே, இப்போது பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின் அல்லது ஷமி இருவரில் ஒருவர் அணியில் பந்துவீச்சாளர்களாக இடம் பெறுவார்கள். இந்த சூழ்நிலையில், ஆறாவது பந்துவீச்சாளர் தேவை. மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்தால் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு வேகப் பந்துவீச்சாளர் தேவை. அணியில் இருக்கும் பந்து வீசும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்களில் ரோஹித், சுபமன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சுழற் பந்துவீச்சாளர்கள் தான்.
விராட் கோலி மட்டுமே மித வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் கொண்டவர். எனவே தான், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியிடம் பந்து வீசுமாறு கேட்டுக் கொண்டார். கோலி கேப்டனாக இருந்த போது ஒரு முறை தான் இனி பந்து வீசப் போவதில்லை என அறிவித்து இருந்தார்.
நீண்ட காலம் கழித்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தான் கோலி பந்து வீசினார். அப்போது பாண்டியா மூன்று பந்துகளை வீசிய நிலையில் காயமடைந்து வெளியேறியதால் அந்த ஓவரின் மீதமிருந்த மூன்று பந்துகளை விராட் கோலி தான் வீசி இருந்தார். தற்போது அந்த பணியை தொடருமாறு ரோஹித் கூறி இருக்கிறார். பந்து வீச மாட்டேன் என்ற தன் முடிவை அணிக்காக மாற்றிக் கொண்டு வலைப் பயிற்சியில் தீவிரமாக பந்து வீசி பயிற்சி செய்தார் கோலி.