பெங்களூரு : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் சச்சினின் 49 சதத்தை சமன் செய்துள்ள விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் எளிதாக ஐம்பதாவது சதத்தை கடப்பார் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு காரணம் விராட் கோலியின் கோட்டைதான் பெங்களூரு சின்னசாமி மைதானம்.

விராட் கோலி டெல்லியில் பிறந்து மும்பையில் தற்போது தங்கியிருந்தாலும் rcb கேப்டனாக இருந்ததால் பெங்களூரு அவரை தத்தெடுத்துக் கொண்டது. இதனால் தன்னுடைய ஐம்பதாவது ஒருநாள் சதத்தை விராட் கோலி பெங்களூருவில் படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதுவும் நெதர்லாந்தை இந்தியா எதிர்கொள்வதால் 50-வது சதத்தை அடிக்கும் அல்வா மாதிரியான வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்தது.
இதனை பயன்படுத்திக் கொண்ட விராட் கோலி ஆரம்பத்தில் பொறுப்பாக விளையாடி அதிரடி காட்டினார். 56 பந்துகளை எதிர் கொண்ட விராட் கோலி 50 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுழற் பந்து வீச்சாளர் வேண்டர் மிர்வ் பவுலிங்கில் விராட் கோலி போல்ட் ஆனார்.
விராட் கோலி சமீப காலமாக சுழற் பந்துவீச்சிக்கு ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அரை இறுதிக்கு முன்பு விராட் கோலி இந்த மைனஸ் பாயிண்டை எப்படியாவது உடைத்து வெளியேற வேண்டும். இல்லையெனில் அது இந்தியாவுக்கு தான் ஆபத்தாக முடியும். எனினும் விராட் கோலி அரை சதம் கடந்து வெளியேறியதால் வாய்ப்பு பறிபோனாலும்,
அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் தன்னுடைய 50-வது சதத்தை அடித்து இந்தியாவுக்கு உலக கோப்பையை விராட் கோலி பெற்றுத் தரவேண்டும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.அப்படி நடந்தால் எப்படி ஒரு மாஸ் ஹீரோ கிளைமாக்ஸ் இல் சண்டை காட்சிகள் போட்டு காப்பாற்றுவாறோ அதே போல் விராட் கோலிக்கு முழு சூப்பர் சீனாக அமையும் என்று ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.