ரோஹித் முன்னேற்றம்
இந்தியாவின் தற்காலிக கேப்டனாக ஆசிய கோப்பையில் இந்திய அணியை வழி நடத்திய கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பண்பில் சிறந்து விளங்கினார். அதோடு, பேட்டிங்கிலும் கலக்கினார். இந்த தொடரில் 317 ரன்கள் எடுத்த ரோஹித் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்தார். முதல் இடத்தில் விராட் கோலி இருக்கிறார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் 5ஆம் இடம் பிடித்து உள்ளார். அவர் ஆசிய கோப்பை தொடரில் 342 ரன்கள் எடுத்து, தொடரில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையும் பெற்றார்.
கோலிக்கு செம போட்டி
ஏற்கனவே, கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மா போட்டி போட்டு வருகிறார் என கருதப்பட்டு வரும் நிலையில், இந்த பேட்டிங் தரவரிசை முன்னேற்றம் ரோஹித் சர்மாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. கோலி தற்போது 884 புள்ளிகளோடு ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ரோஹித் தன் சிறந்த பதிவாக 842 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
பந்துவீச்சிலும் இந்தியா முன்னேற்றம்
ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா தன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். மற்றொரு பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆறு போட்டிகளில் 10 விக்கெட்கள் வீழ்த்தியதை அடுத்து தன் மிக சிறந்த பந்துவீச்சாளர் பதிவாக 700 புள்ளிகள் பெற்றது மட்டுமில்லாமல் தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
அசத்தல் ஆப்கன்
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, உட்பட அனைத்து அணிகளையும் விட சிறப்பாக செயல்பட்ட அணி ஆப்கானிஸ்தான் தான். அந்த அணியின் ரஷித் கான் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்து கலக்கியுள்ளார். மேலும், பந்துவீச்சாளர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.