மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா,ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செலை பின்னுக்குத் தள்ளி ரோஹித் இந்த இடத்தைப் பிடித்தார். மிட்செல், ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.
கிறிஸ்ட்சர்ச்சில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 119 ரன்கள் குவித்து, மிட்செல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்திருந்தார். ஆனால், இடுப்பு தசைப் பிடிப்பு காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட முடியாமல் போனதால், புள்ளிகளை இழந்தார். இதனால் மிட்செலின் தரவரிசை புள்ளிகள் 766 ஆக குறைந்தது, இதன் மூலம் ரோஹித் 781 புள்ளிகளுடன் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

நவம்பர் 30 அன்று ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 202 ரன்கள் குவித்து அதிக ரன் அடித்த வீரராக திகழ்ந்தார். சிட்னியில் அவர் அடித்த 121* ரன்கள் அடித்திருந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 26 ஒருநாள் போட்டிகளில் 806 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 33.58. மூன்று சதங்கள் அடித்துள்ளார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் பழிவாங்க இந்திய அணி முயற்சிக்கும். கொல்கத்தா மற்றும் குவாஹாத்தி போட்டிகளில் டெம்பா பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் சோகத்தில் இருக்கும் இந்திய அணிக்கு, ரோஹித் மற்றும் விராட் கோலியின் வருகை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
சுப்மன் கில்லின் கழுத்து காயம் காரணமாக கே.எல். ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார். ஒருநாள் தொடருக்குப் பிறகு இரு அணிகளும் 5 டி20 போட்டிகளிலும் மோதவுள்ளன. 2022-ல் தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் இரண்டிலும் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.