துபாய்: ஜடேஜா மற்றும் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் நடுவேயான மோதல் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் விடுத்த மேல் முறையீடு கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்க மறுத்துவிட்டது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது இந்திய கிரிக்கெட் அணி. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டின் 2வது நாள் உணவு இடைவேளையின் போது, இந்திய பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜாவுடன் வாக்குவாதம் செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் அவரை திட்டி, தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்து கொண்டார்.

ரவீந்திர ஜடேஜா எந்த வித தவறும் செய்யவில்லை, ஆண்டர்சன் தான் அவரை வம்புக்கு இழுத்தார் என்று இந்திய கேப்டன் டோணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்திய அணி நிர்வாகம் ஆண்டர்சன் மீது நடத்தை விதி லெவல்-3-ஐ மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்தது. அது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷனராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கார்டன் லீவிஸ் நியமிக்கப்பட்டார்.
கடந்த 1ம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய கார்டன் லீவிஸ், இருவர் மீதும் தவறில்லை என்று தீர்ப்பு வழங்கினார். போதிய வீடியோ ஆதாரம் இல்லாததால் அவர் இந்த முடிவுக்கு வந்தார்.
இதனால் நான்கு டெஸ்ட் போட்டிகள் வரை விளையாட தடை விதிக்கப்படலாம் என்ற பயத்தில் இருந்த ஆண்டர்சன் தண்டனையின்றி தப்பி விட்டார். இந்த தீர்ப்பால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கிறது.இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் சஞ்சய் பட்டேல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனுக்கு நேற்று முன்தினம் இரவு இ-மெயில் அனுப்பினார்.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மேல் முறையீட்டை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்ததுள்ளது. ஜடேஜா- ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஐசிசி மறுத்து விட்டது.