மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 15 பேர் கொண்ட வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் பல சீனியர் வீரர்கள் விடப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக டி20 உலக கோப்பையில் தொடர்ந்து தொடக்க வீரராக இடம் பெற்று வந்த கே எல் ராகுல் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். கே எல் ராகுலுக்கு மாற்றுவீரராக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதேபோன்று கில் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கே எல் ராகுல் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கி இருக்கிறார். அப்போது பேசிய அவர் கே எல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக செயல்பட்டு வருகிறார்.
நாங்கள் நடுவரிசையில் எந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தான் யோசித்து வந்தோம். மேலும் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் நடு வரிசையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சஞ்சு சாம்சனை பயன்படுத்தலாம்.
எனவே எங்களுக்கு எது தேவையோ அதற்கு ஏற்ற வகையில் நாங்கள் அணியை தேர்வு செய்தோமே, தவிர இவரை விட அவர் சிறந்தவர் என்ற பாணியில் அணியை தேர்வு செய்யவில்லை என்று அஜித் அகார்கர் விளக்கம் அளித்துள்ளார். கேஎல் ராகுல் தொடக்க வீரராக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நடுவரிசையில் தான் களம் இறங்குகிறார்.
இதனால் கேஎல் ராகுலை நடுவரிசையில் விளையாட சொல்லி பிசிசிஐ தேர்வு குழு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்குவேன் என்று கே.எல் ராகுல் ஒற்றை காலில் நின்று இருக்கிறார். இந்த சூழலில் கே எல் ராகுலின் ஸ்ட்ரைக் ரைட்டும் பெருமளவில் ஈர்க்கும் வகையில் இல்லை. ராகுலை விட ஜெய்ஸ்வால் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தால் கே எல் ராகுல் இடம் தற்போது காலியாக இருக்கிறது. தேர்வு குழுவின் பேச்சைக் கேட்டு இருந்தால் இந்நேரம் நடு வரிசையில் கே எல் ராகுல் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.