மும்பை : 2024 ஆம் ஆண்டு t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை அஜித் அகாஸ்கர் தலைமையிலான தேர்வு குழு நேற்று அறிவித்தது. இதில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜடேஜா, பும்ரா, சாகல்,குல்தீப் யாதவ், முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் இந்த தேர்வு முடிவுக்கு வரவேற்பு இருந்தாலும் பெரும் அளவு எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் எல்லாம் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். திறமையும் பார்மும் இருந்தால் மட்டுமே டி20 உலக கோப்பையை வெல்ல முடியும். ஆனால் ஐபிஎல் தொடரில் தடுமாறி வரும் கில் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் ரிசர்வ் வீரராகஇடம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு, ரிங்கு சிங் நீக்கப்பட்டு இருப்பது புள்ளி விவரங்களை வைத்து தான் என்று நினைக்கின்றேன். ஆனால் கிரிக்கெட் அறிவை பயன்படுத்தி இருந்தால் ரிங்குசிங் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற்று இருக்க வேண்டும்.
டி20 போட்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 16 மற்றும் 17வது ஓவரில் களம் இறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை ரிங்குசிங் சேர்த்து இருக்கிறார். இந்திய அணிக்காக பெரும் இழப்பாக தான் நான் நினைக்கின்றேன். ஜடேஜா உடன் அவர் இணைந்து விளையாடி இருந்தால் நிச்சயம் நாம் வெற்றி பெற்றிருக்க முடியும். எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்பதை தாண்டி அவர் எவ்வளவு தரமான வீரர் என்பதை வைத்து அணியை தேர்வு செய்திருக்க வேண்டும்.
தற்போது எல்லாம் இன்ஸ்டாகிராமில் அதிகமாக யார் லைக் வாங்குகிறார்கள் என்பதற்கு தான் அணியில் இடம் கிடைக்கின்றது. மாறாக கிரிக்கெட் திறனை வைத்து தான் அணியை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று ராயுடு குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அணிக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 89 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 176 என்ற அளவில் வைத்திருக்கிறார். பல போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் இருந்ததால் அவருடைய சராசரி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.