நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு பங்கு பெறும் இந்திய அணி வீரர்கள் மே 25ஆம் தேதி புறப்பட்டு அமெரிக்காவுக்கு வந்து சேர உள்ளனர். இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை அயர்லாந்து உடன் ஜூன் 5ஆம் தேதி விளையாடுகிறது.
இதனை அடுத்து உலகமே எதிர்பார்த்து இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. நியூயார்க் கிரிக்கெட் மைதானம் செயற்கையான முறையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கிரிக்கெட் மைதானம் ஆகும்.

இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆடுகளம் டிராப்-இன் என்ற வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது இந்திய அணி வீரர்களுக்கு நிச்சயம் தெரியாது. மேலும் அமெரிக்க ஆடுகளங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்குமா? இல்லை தோய்வாக இருக்குமா என்றும் தெரியாது.
இதனை கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினால் தான் சரிவரும் என்று பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. அதன்படி இந்திய வீரர்கள் மார்ச் 26 அல்லது 27ஆம் தேதி அன்று நியூயார்க் நகருக்கு வந்து சேருவார்கள். இந்த சூழலில் ஜூன் ஒன்றாம் தேதி இந்திய அணி வங்கதேசத்துடன் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது.
முதலில் ப்ளோரிடா மாகாணத்தில் பயிற்சி போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்தியா விளையாடும் லீக் போட்டிகள் அனைத்தும் நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் தான் நடத்தப்படுகிறது.அது மட்டுமல்லாமல் பயிற்சி ஆட்டத்திற்காக புளோரிடா வந்து அங்கிருந்து நியூயார்க் வருவது வீரர்களுக்கு உடல் அளவில் சோர்வை ஏற்படுத்தும்.
இந்த அலைச்சலை தவிர்ப்பதற்காகவும், புதிய மைதானம் எப்படி செயல்பட போகிறது என்பது வீரர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவும் பலம் வாய்ந்த வங்கதேசத்துக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டத்திற்கு பிசிசிஐ கேட்டிருக்கிறது. இதற்கு ஐசிசியும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.மேலும் ஐசிசி t20 உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் மே 25ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது.இதற்கான அட்டவணையை ஐசிசி விரைவில் வெளியிடப்பட உள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தங்களுக்குள் இருதரப்பு டி20 தொடரில் விளையாடுவதால் இரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இல்லை.