நியூயார்க் : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை பெரும் அளவு இருப்பதாக முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது. முன் எப்போதும் இல்லாத அளவு 20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்கின்றது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே மிகப் பெரிய விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் டி20 கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஐசிசி டி20 உலக கோப்பையை அங்கும் நடத்துகின்றது. இதற்காக நியூயார்க் புறநகர் பகுதியில் தற்காலிக மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை சுமார் 20,000 டாலர் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு டிக்கெட்டின் விலை 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இதேபோன்று இந்த டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஆகும். இதற்கு தான் தற்போது லலித் மோடி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், டி20 உலக கோப்பையை அமெரிக்காவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் ஐசிசி இந்த தொடரை நடத்துகிறது என்பதை மறந்து விட வேண்டாம்.
இங்கு போட்டியின் பிரபலத்தை தான் பார்க்க வேண்டுமே தவிர வசூல் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. ஒரு டிக்கெட்டின் விலையை 20,000 டாலர் என்று நிர்ணயித்தால் ரசிகர்கள் எவ்வாறு வந்து போட்டியை பார்ப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டியை தென்னாப்பிரிக்காவில் நடத்த தாம் 100 மில்லியன் செலவிட்டு, டிக்கெட் விற்பனை வெறும் ஐந்து மில்லியன் தான் வசூல் செய்ததாக லலித் மோடி குறிப்பிட்டார்.
டிக்கெட் விலையை இரண்டு டாலரில் இருந்து 15 டாலர் வரை தான் தாம் நிர்ணயித்ததாகவும், ஆனால் தொலைக்காட்சி உரிமம் விளம்பரம் இதன் மூலம் பெரிய தொகையை தாங்கள் பெற்றதாகும் அவர் கூறினார். இதனால் டி20 உலக கோப்பை வெற்றி பெற வேண்டும் என்றால் டிக்கெட் விலையை ஐசிசி குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.