மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக பல்வேறு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி, இந்த தொடரில் களமிறங்குகிறது.
11 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லாத இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் பயிற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் யார் சிறப்பாக விளையாடப் போகிறார்கள் என்பது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இயன் பிஷப் கணித்திருக்கிறார்.

நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுக்கப்போகும் வீரர் யார் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயன் பிஷப், விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் என யார் பேரையும் கூறவில்லை. மாறாக இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் தான் அதிக ரன்கள் எடுக்கப் போகிறார் என்று அவர் கணித்திருக்கிறார். இதைப் போன்று அதிக விக்கெட் எடுக்க போகும் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், இந்திய அணியில் பும்ரா தலைசிறந்த பவுலராக இருக்கலாம். சாஹல், டி20 உலக கோப்பையில் கம் பேக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை குல்தீப் தான் வரும் டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுக்க போகும் வீரர் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். குல்தீப் யாதவும் நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று அரையிறுதிக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள் எவை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயன் பிஷப், டி20 உலக கோப்பை அரையிறுதி தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ்,ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார். மேலும் நடப்பு உலக கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போகும் வீரராக இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் இருப்பார் என்றும் அவர் கணித்திருக்கிறார்.