லீட்ஸ்: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ரிஷப் பண்ட் புது உச்சம் தொட்டு இருக்கின்றார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய சாதனை நிகழ்த்திய இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன்பு 2001 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன்டி ஃபிளவர் இத்தகைய சாதனையை செய்தார். இதன் காரணமாக ரிஷப் பண்ட், தற்போது தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் ஒன்றைத் தொட்டிருக்கிறார்.

ஏழாவது இடத்தைப் பிடித்துள்ள ரிஷப் பண்ட் முதல் முறையாக 800 புள்ளிகளை கடந்து இருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 800 புள்ளிகளை கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கின்றார்.
இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் முதல் டெஸ்டில் சதம் அடித்த இந்திய அணியின் புதிய கேப்டன் கில், ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது இருபதாவது இடத்தை பிடித்திருக்கின்றார். இதேபோன்று முதல் டெஸ்டில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் நான்காவது இடத்தில் நீடிக்கின்றார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகளை எடுத்த நிலையில் பும்ரா முதலிடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இது போன்று ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
ஆனால் பென் ஸ்டோக்ஸ் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய சைக்கிள் தொடங்கியிருக்கிறது. இதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி 100 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்திலும், வங்கதேசம் 33 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை 33 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி தற்போது புள்ளிகள் எதுவும் இன்றி நான்காம் இடத்தில் இருக்கிறது.