மும்பை: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாப் 5 இடங்களுக்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல் நட்சத்திர வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதனால் வங்கதேச டெஸ்ட் தொடரில் இவர்கள் மூவரின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் தனஞ்செயா டி சில்வா, நிசாங்கா, லஹிரு குமாரா, ரத்னநாயகே, மேத்யூஸ் உள்ளிட்ட பலரும் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

அதேபோல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர இளம் வீரர் ஹாரி ப்ரூக் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையிலில் சரிவை சந்தித்துள்ளார். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், நம்பர் 5ல் இருந்த ஹாரி ப்ரூக் மொத்தமாக 7 இடங்கள் சரிந்துள்ளார்.
இதனால் 12வது இடத்திற்கு ஹாரி ப்ரூக் தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக 6வது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 7வது இடத்தில் இருந்த இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6வது இடத்திற்கும், 8வது இடத்தில் இருந்த விராட் கோலி 7வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேபோல் நம்பர் 1 இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ந்து வருகிறார்.
அதேபோல் இலங்கை வீரர்களான தனஞ்செயா டி சில்வா 3 இடங்கள் முன்னேறி 13வது இடத்திற்கும், கமிண்டு மெண்டிஸ் 6 இடங்கள் முன்னேறி 19வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். அதேபோல் பவுலிங்கை பொறுத்தவரை இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறார். 2வது இடத்தை ஜஸ்பிரிட் பும்ராவும், ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட்டும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதேபோல் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 7வது இடத்தில் தொடர்ந்து வருகிறார். குல்தீப் யாதவ் 15வது இடத்தில் தொடர்ந்து வருகிறார். இந்திய அணி 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் 3 பவுலர்கள் டாப் 10 வரிசைக்குள் இடம்பிடித்திருக்கின்றனர். இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடர் என்பதால், இந்திய அணி வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதிலும் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் ஃபேப் 4ல் முன்னேற்றம் கண்டிருப்பதால், விராட் கோலியின் ஆட்டம் வேறு லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதனால் வரும் நாட்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசம் டெஸ்ட் தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் ஆகியவற்றிலும் இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.