
மோசமான சூழல்
மீண்டும் ஐபிஎல் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதே வேளையில், உலகக் கோப்பை டி20 தொடர் நிலை அந்தரத்தில் தொங்குகிறது. உலகக் கோப்பை டி20 தொடர், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கவிருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய தொடர் இது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2021ல் இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறும் என்று ஐசிசி ஒத்திவைத்தது. ஆனால், இந்தியாவில் இப்போது நிலவும் மோசமான சூழலில், 'விளையாட்டு' என்ற வார்த்தையை கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்தியாவில் வாய்ப்பிருக்கா?
இந்த நிலையில், உலகக் கோப்பை குறித்து ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தற்போதைய சூழலில், இங்கு உலகக் கோப்பையை நடத்த முடியுமா? என்று ஆலோசிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் நடத்த முடியாவிட்டால், வேறு எந்த நாட்டிலாவது நடத்த வாய்ப்புள்ளதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

சிக்கலான நிலைமை
மற்ற அணிகளுக்கு வெவ்வேறு கிரிக்கெட் தொடர்கள் அடுத்தடுத்து இருப்பதால், அதற்கான ஷெட்யூல் ஏற்கனவே போடப்பட்டுவிட்டதால், உலகக் கோப்பையை வேறு தேதிக்கு மாற்ற முடியாத சூழல் உள்ளது. ஆகையால், இத்தொடரை நடத்தலாமா அல்லது கைவிடலாமா என்பது குறித்த இறுதி முடிவை ஐசிசி அன்றைய தினம் எடுக்க உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஆசிய கோப்பைத் தொடர் ரத்து செய்யப்பட்டுவிட்ட சூழலில், டி20 உலகக் கோப்பை நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது.

இறுதி அறிவிப்பு என்ன?
இந்த நிலையில், வரும் மே 29ம் தேதி, SGM எனப்படும் 'சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை' பிசிசிஐ கூட்டுகிறது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. அன்றைய தினம் பிசிசிஐ எடுக்கும் முடிவுகள், ஜூன் 1ம் தேதி மீட்டிங்கில் ஐசிசி-யிடம் தெரிவிக்கப்படும். அதனைப் பொறுத்தே இறுதி முடிவுகள் தெரியவரும்.
இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு தொடருக்கு என பிசிசிஐ அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, புது டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, தரம்சாலா மற்றும் லக்னோ ஆகிய 9 இடங்களை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











