மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 33வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் மோதுகின்றனர்.
கடைசியாக இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடிய ஆட்டத்தை 130 கோடி இந்திய ரசிகர்கள் தங்களுடைய வாழ்நாளில் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டி இரு அணிகளுக்கும் இடையே இங்கு தான் நடைபெற்றது. ஆனால் தற்போது நிலைமை தலைக்கீழ் மாறியிருக்கிறது. அந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடிய விராட் கோலி, அஸ்வின் தவிர வேறு யாரும் இந்திய அணியில் இல்லை. ஆனால் இலங்கையின் முற்றிலும் புதிய வீரர்கள் தான் இந்த தொடரில் களமிறங்குகிறார்கள். நடப்பு உலக கோப்பை தொடரில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஆனால் இலங்கை விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் வெற்றி நான்கில் தோல்வி என புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. இதனால் இன்றைய போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களமிறங்குகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி விடும். இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி எந்த மாற்றமும் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா இல்லாததால் சூரியகுமார் யாதவும் ,முகமது சமியும் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இருப்பார்கள். அதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா உடல் தகுதியை எட்டி அணிக்குத் திரும்பினால் அது ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு தான் பாதிப்பு ஏற்படும்.
இலங்கை அணியை பொறுத்தவரை அனுபவ வீரர் ஆஞ்சிலோ மேத்தீவ்ஸ் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் சதம் அடித்திருக்கிறார். மேலும் பந்து வீச்சில் ரோகித் சர்மாவை ஏழு முறை ஆட்டம் இழக்க வைத்திருக்கிறார். இலங்கை அணி எப்போது எப்படி வேண்டுமானாலும் விளையாடுவார்கள் என்பதால் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது.