அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்காக சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வென்றது கிடையாது.

1992, 96,99, 2003, 2011, 2015, 2019 என 7 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி இருக்கிறது. இதில் ஒரு முறை கூட இந்தியாவை பாகிஸ்தான் வென்றது இல்லை. இந்த நிலையில் இந்த தோல்வி பயணத்திற்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்கும் என முன்னாள் கேப்டன் வசீம் அக்ரம் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய வசீம் அக்ரம், 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையில் நாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அந்த ஆட்டத்தில் கூட நாங்கள்தான் வெல்லும் நிலையில் இருந்தோம். எனினும் அன்றைய ஆட்டத்தில் நாங்கள் அடைந்த தோல்வியை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இந்தியாவுடன் தோற்றதால் நாங்கள் வீடு திரும்பும்போது பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டோம். அதன் பிறகு சில நாட்களுக்கு எங்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. எனினும் இம்முறை பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. ஏற்கனவே டி20 உலக கோப்பையில் அடைந்த தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் அணி 2021 ஆம் ஆண்டு வென்று பதிலடி கொடுத்தது.
இதே போல் ஒரு சூழல் இம்முறையும் ஏற்படும் என நான் நம்புகிறேன். இந்தியாவிற்கு எதிராக இருக்கும் தொடர் துரதிஷ்டத்திற்கு இம்முறை விடிவு கிடைக்கும் என நம்புகிறேன் என்று வசீம் அக்ரம் கூறியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தற்போது வலுவாக மாறிவிட்டது. இலங்கைக்கு எதிராக அவர்கள் 345 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.