டெல்லி : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பட்டையை கிளப்பி வருகிறார். டெல்லியில் பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா அதிகபட்சமாக 80 ரன்களும், அஸ்மத்துல்லா 62 ரன்கள் எடுக்க அந்த அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இதில் கேப்டன் ரோகித் சர்மா முதல் இரண்டு ஓவருக்கு பொறுமையாக விளையாட அதன் பிறகு தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காலில் சலங்கை மட்டும் கட்டிக் கொள்ளவில்லை. மற்றபடி டெல்லி ஆடுகளத்தில் ஆப்கான் பந்துவீச்சில் ரோகித் சர்மா கதகளி, கபடி என அனைத்தையுமே ஆடினார்.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் எவ்வாறு பந்து வீசினாலும் ரோகித் சர்மா பட்டையைக் கிளப்பினார். இதன் மூலம் ரோகித் சர்மா 30 பந்துகளில் எல்லாம் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சிக்ஸர்கள் பவுண்டரி என ரோகித் சர்மா விளாச இந்திய அணி ஸ்கோர் 10 ஓவரில் 94 ரன்கள் சென்றது. இதில் இஷான் கிஷன் அடித்தது வெறும் 11 ரன்கள் தான். எஞ்சிய ரன்களில் 76 ரன்கள் ரோகித் சர்மா அடித்தவை.
அதுவும் வெறும் 43 பந்துகளில் இந்த இலக்கை எட்டினார். ரோகித் சர்மாவின் இன்னிங்ஸில் 10 ஓவர் முடிவில் ரோகித் சர்மா ஒன்பது பவுண்டரிகளையும் நான்கு இமாலய சிக்சர்களும் அடித்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசி அவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 553 சிக்சர்களை அடித்து இருந்த நிலையில் ரோகித் சர்மா தற்போது 554 சிக்சர் அடித்திருக்கிறார்.

இந்த ரெக்கார்டை கிறிஸ் கெயில் 551 இன்னிங்ஸில் எடுத்த நிலையில் ரோகித் சர்மா 473 இன்னிங்ஸில் கடந்துவிட்டார். இதேபோன்று உலகக்கோப்பை வரலாற்றில் ரோகித் சர்மா ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார். இந்த மைல் கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவில் சச்சின்,விராட் கோலி, கங்குலி ஆகியோருக்கு பிறகு ரோகித் சர்மா இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.