மும்பை: 15 ஆண்டுகளாக இந்திய அணியில் ரோகித் சர்மாவும், நானும் இணைந்து விளையாடி வரும் சூழலில், இருவரும் சேர்ந்து உலகக்கோப்பையை வென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல்முறையாக சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். அதேபோல் உலகக்கோப்பை தொடரிலும் முதல்முறையாக சொந்த மண்ணில் களமிறங்கியுள்ளார் ரோகித் சர்மா.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சேர்க்கப்படாத ரோகித் சர்மா, 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வீரராக விளையாடினார். அதன்பின் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் துணை கேப்டனாக விளையாடிய அவர், இன்று சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 6 போட்டிகளில் விளையாடி 6-லும் வென்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் கூட இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இதனால் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அதற்கேற்ப இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அபாரமான ஃபார்மில் விளையாடி வருகிறார். இதுவரை 7 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 402 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இந்த நிலையில் ரோகித் சர்மா உடனான நட்பு குறித்து இந்திய அணி வீரர் விராட் கோலி பேசுகையில், நானும் ரோகித் சர்மாவும் இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வருகிறோம்.
அதனால் நாங்கள் இருவரும் இணைந்து உலகக்கோப்பையை வென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரர்களான இருவரும் களத்தில் நட்புடன் செயல்படுவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இருவருக்கும் கடைசி உலகக்கோப்பையாக இருக்க வாய்ப்புள்ளதால், வெற்றியுடன் இருவரும் விடைபெற வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.