அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயிற்றுக்கிழமை பல பரிட்சை நடத்துகிறது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வந்தால் ஒரு திட்டமும் ஆஸ்திரேலியா வந்தால் ஒரு திட்டமும் என இரண்டு திட்டங்களை ஏற்கனவே இந்தியா வகுத்து வைத்திருந்தது.
அதன்படி தற்போது ஆஸ்திரேலியா வந்திருப்பதால் இந்தியாவின் பிளேயிங் லெவனின் ஒரு அதிரடி மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள கடுமையாக தடுமாறுகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கூட ஆஸ்திரேலியாவின் சுழற் பந்து வீச்சு தடுமாற்றம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், டிராவிஸ் ஹெட் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால் தமிழக வீரர் அஸ்வினை அணிக்கு கொண்டுவர ரோகித் சர்மா திட்டம் தீட்டு இருக்கிறார்.
ஏற்கனவே லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்ட போது அஸ்வினை ரோகித் சர்மா சேர்த்தார். இதனால் அஸ்வின் இறுதிப் போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் அஸ்வின் அணிக்குள் வந்தால் இந்தியா யாரை நீக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் கீழ் வரிசையில் விளையாடுவதற்காக இருக்கிறார்.
ஆனால் தற்போது உள்ள சூழலில் சூரியகுமார் பேட்டிங் பெரிய அளவில் இந்தியாவுக்கு தேவைப்படவில்லை. இதன் காரணமாக சுழற் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் தெரிந்த அஸ்வினை அந்த இடத்தில் சேர்க்க ரோகித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்திய அணி தொடர்ந்து ஒரே அணியை வைத்து விளையாடி வெற்றி பெறுகிறது. இந்த காம்பினேஷனை மாற்ற வேண்டாம் என்றும் இதே வீரர்களை வைத்து விளையாடுங்கள் என்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனால் அஸ்வின் அணிக்குள் வருவாரா இல்லை இந்தியா அதே வீரர்களை வைத்துதான் விளையாடுமா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.