மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் சோகத்தில் இருக்கிறார்கள்.
நேற்று அடைந்த தோல்வியிலிருந்து இன்னும் மீளாமல் பல இந்திய ரசிகர்கள் இன்று அலுவலகத்திற்கும் பள்ளிகளுக்கும் சென்றிருக்கிறார்கள். சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை ஒன்றைக் கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய தொடரில் ஒரு முக்கியமான நாளில் நம்மை விட அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
இந்திய அணிக்கு போதுமான அதிர்ஷ்டம் இல்லை. ஒரே ஒரு மோசமான நாள் தான் இந்த தொடரில் நமக்கு அமைந்தது. மற்ற வகையில் நமக்கு இது மிகச் சிறப்பான ஒரு தொடராகும். இந்த தோல்வி நிச்சயம் நமது இதயங்களை உடைத்து இருக்கும். இந்த தோல்வியின் மூலம் வீரர்கள் ரசிகர்கள் மற்றும் மனதுக்கு நெருக்கமானவர்கள் ஆகியோர் எந்த அளவுக்கு மனசு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். தற்போது அவர்களுடைய மனநிலை எந்த அளவுக்கு இருக்கும் என்றும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
தோல்வி என்பது விளையாட்டில் ஒரு அங்கம் என்பதை நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அணிதான் இந்த தொடரில் நமக்கு பல மகிழ்ச்சிகளை கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் யாரும் மறந்து விட வேண்டாம் என்று சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியிருக்கிறார். நேற்று இந்திய அணி தோல்வியை தழுவிய உடனே சச்சின் டெண்டுல்கர் வீரர்களை அழைத்து தனியாக பேசி அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.