புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. களமிறங்கிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தற்போது வங்கதேசத்தை வீழ்த்தினால் அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாக மாறிவிடும்.
அதேசமயம் உலகக்கோப்பை போன்ற நெடுந்தொடரில் விளையாடும் போது சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் சில நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.டெங்கு காய்ச்சலுக்கு பிறகு அணிக்கு திரும்பிய கில், பாகிஸ்தானுக்கு எதிராக 16 ரன்களின் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கில், தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பார்.
வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து தன்னுடைய உலகக் கோப்பை கணக்கை கில் தொடங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல் தொடக்க வீரராக களமிறங்குவார். அதேபோன்று நம்பர் மூன்றாவது வரிசையில் விராட் கோலியும், நம்பர் நான்காவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரும் இடம் பெறுவார்கள்.
நடு வரிசையில் கே எல் ராகுல், ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா ஏழாவது இடத்தில் ஜடேஜா விளையாடக்கூடும். புனே மைதானம் அளவில் மிகவும் சிறியது என்பதால் எட்டாவது இடத்தில் அஸ்வினுக்கு பதில் சர்துல் தாக்கூரே இடம் பெற தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை மைதானம் 100% சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அஸ்வின் அணிக்கு திரும்பலாம்.
ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு. இந்த நிலையில் பும்ரா தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. பும்ரா விளையாடாத பட்சத்தில் அந்த இடத்திற்கு முகமது சமி வரக்கூடும்.எஞ்சிய இடத்தில் குல்திப் யாதவும், முகமது சிராஜும் இடம் பெறுவார்கள். ஆனால் அணியில் சுழற்சி முறை பற்றி எதுவுமே யோசிக்கவில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியிருக்கிறார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அதே அணியே இன்றைய ஆட்டத்திலும் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.