ஹராரே : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த மெயின் தொடரில் 10 அணிகள் பங்கேற்கிறது. இந்தப் பத்து அணிகளை தேர்வு செய்ய ஐசிசி ஒரு புதிய முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
அதன்படி சூப்பர் லீக் என்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் போல் நான்கு ஆண்டுகள் நடைபெறும். போட்டியின் முடிவில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டது.
எஞ்சியுள்ள இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்காக தான் உலகக்கோப்பை தகுதிச்சுற்று நடைபெறுகிறது. இது இம்முறை ஜிம்பாவே ஜூன் 18ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சூப்பர் லீக்கில் கடைசி ஐந்து இடங்களை பிடித்த அணிகளும் மற்ற கத்துக்குட்டி அணிகளும் என பத்து அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்கிறது.

இதில் குரூப் ஏ வில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளும், குரூப் பி பிரிவில் அயர்லாந்து, ஓமான், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் விளையாடுகின்றன. ஒவ்வொரு குரூப்பில் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் சுற்றி மோதுகின்றன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் டாப் மூன்று இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குச் செல்லும்.
இதில் குரூப் ஏ வில் இருந்து இடம்பெற்ற மூன்று அணிகளும் குரூப் பி யிலிருந்து இடம் பெற்ற மூன்று அணிகளும் தங்களுக்குள் மூன்று போட்டிகளில் மோதிக் கொள்வார்கள். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று விடும்.பலம் வாய்ந்த முன்னாள் சாம்பியன்களான இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலக கோப்பையில் விளையாட தகுதி சுற்றில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டு இருப்பது காலத்தின் கொடுமை.
இதில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு ஜிம்பாவே மற்றும் அயர்லாந்து அணிகள் கடும் நெருக்கடியை கொடுப்பார்கள். இந்தத் தொடர் இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் டிஸ்னி ஹாட் ஸ்டார் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது.